இங்கிலாந்தில் உள்ள சரே மாநிலம் எப்சம் நகரைச் சேர்ந்தவன் ஆஸ்கர் செல்பி. 7 வயது சிறுவனான இவன் ஸ்டேம்போர்டு தொடக்க பள்ளியில் படித்து வருகிறான்.
இங்கிலாந்தில் 14 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எஜுகேசன் (ஜி.சி.எஸ்.இ.) தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஆங்கிலம், அறிவியல், கணிதம் என தங்களுக்கு பிடித்தமான பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
நிர்ணயிக்கப்பட்டதை விட பாதி வயதிலேயே இந்த தேர்வில் கலந்து கொண்ட ஆஸ்கர் செல்பி கணிதத்தை தேர்வு செய்து எழுதினான். அதில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து இருக்கிறான்.
இளம் வயதிலேயே கணித மேதையான இவன் அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்து இருக்கிறான். திறமையை அதிசயித்து வியந்த இங்கிலாந்து அரசு இவனை நிதித்துறை ஆலோசகராக நியமனம் செய்துள்ளது. இதை தொடர்ந்து அரசின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான ஆலோசனையை அவன் வழங்க இருக்கிறான்.
வாரத்தில் ஒருநாள் அதாவது சனிக்கிழமை அரசுக்கு ஆலோசனை வழங்க திட்டமிட்டு இருக்கிறான். இங்கிலாந்து அரசின் ரூ. 12.46 லட்சம் கோடி பட்ஜெட் பற்றாக்குறையை போக்க என்ன ஆலோசனை வைத்திருக்கிறான் என அவனிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவன், வரி உயர்வு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தான்.